(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, November 23, 2009

பைஅத்- முரீது ஆய்வு

ஆன்மீக உறுதிமொழி (பைஅத்) பிறரிடம் எடுக்கலாமா..?



பையத் என்றால் என்ன? சில சகோதரர்கள் மற்ற சிலருக்கு பையத் கொடுக்கிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள் நாம் வலியுல்லா, சூபி, தேவதைகள் (Angels)...ஆகியோர்களை பின்பற்றவேண்டும் என்று.

பைஅத் என்ற அரபு பதத்திற்கு உடன்படிக்கை என்றுப் பொருள். இந்த உடன்படிக்கையை நாம் இரண்டு விதமாக பிரிக்கலாம்.

ஒன்று உலகத்திற்கான, உலகம் சார்ந்த உடன்படிக்கை.
மற்றொன்று இறைவனுக்கான, ஆன்மீகம் சார்ந்த உடன்படிக்கை.

நீங்கள் ஆன்மீக உடன்படிக்கை (பைஅத்) பற்றிக் கேட்டுள்ளீர்கள். ஆன்மீக உடன்படிக்கையை இன்று யாரும் யாரிடமும் செய்ய முடியாது, செய்யக் கூடாது. இது பற்றி விரிவாக தெரிந்துக் கொள்வோம்.

இறைவனின் சட்டதிட்டங்களை கடைபிடிக்கும் விஷயத்தில், அவனைப் பற்றி சிந்திக்கும் விஷயத்தில், அவனை புரிந்துக் கொள்ளும் விஷயத்தில் மனிதர்களுக்கு - முஸ்லிம்களுக்கு - மத்தியில் ஏற்றத்தாழ்வு இருக்கத்தான் செய்கின்றன. இதற்கு காரணம் மனித அறிவின் பலவீனங்களேயாகும். எல்லா மனிதர்களும் சமமான அறிவுள்ளவர்களாகத்தான் படைக்கப் படுகிறார்கள். அதை பயன்படுத்தும் முறையை பொருத்து, பக்குவப்படுத்தும் முறையை பொருத்து மனிதர்கள் பெரும் வேறுபாட்டை அடைகிறார்கள் என்பதை நாம் கண்டு அனுபவித்து வருகிறோம். இந்த வேறுபாடுகளை அவர்கள் கற்கும் கல்வி, கிடைக்கும் அனுபவம், இருக்கும் சூழ்நிலை, சுற்றி வாழும் சமூகங்கள் ஆகியவையே தீர்மானிக்கின்றன.

இறைவனையும், இறைத்தூதர்களையும், இஸ்லாத்தையும் புரிந்துக் கொள்ளும் விஷயத்திலும் மனிதர்களுக்கு மத்தியில் பாகுபாடு நிலவுவதற்கு நாம் மேலே குறிப்பிட்டவையே காரணங்களாகும். இந்த சாதாரண விஷயத்தை விளங்க முடியாதவர்கள் தான் முரீது என்ற அத்வைத கோட்பாட்டில் தன் ஈமானை இழந்து நிர்ப்பவர்கள்.

பாதை தெரியாமல் பயணிக்கும் தளமாகவே இந்த உலக வாழ்க்கையுள்ளது. மனிதன் சுயமாக சிந்தித்து விளங்க முடியாத பெருத்த இடற்பாடுகளும் குறுக்கீடுகளும் இந்த தளத்தில் உள்ளன. எனவே அவனை வழி நடத்தவும் போய் சேரக்கூடிய இலக்கை அறிவித்துக் காட்டவுமே இறைவன் புறத்திலிருந்து வேதங்கள் வந்தன. அதன் படி வாழ்ந்துக் காட்டவும் வழி நடத்தவும் தான் இறைத்தூதர்கள் வந்தார்கள். இறைவனை விளங்கி புரிந்துக் கொள்வதற்குறிய சரியான அளவு கோலை நம்மைப் போன்ற மனிதர்களாக இருந்த இறைத்தூதர்களிடமிருந்துதான் பெற முடியும். அவர்களல்லாத வேறு வழியில் பெறுவதற்கு எந்த வித சாத்தியக் கூறும் இல்லை.

அந்த இறைத் தூதர்களில் யாருமே,

நாங்கள் இறைவனைக் காட்டுகிறோம் என்று கூறவில்லை.

இறைவனும் மனிதனும் இரண்டற கலந்து விட முடியும் என்று கூறவில்லை

இறைவனுக்கும் எங்களுக்கும் அந்தரங்க தொடர்பு உண்டு என்றுக் கூறவில்லை.

நாங்கள் இறைத் தூதர்கள் என்பதால் நீங்களும் நாங்களும் வேறுபட்டவர்கள் என்று குரு - சீடர்கள் முறையை உருவாக்கவில்லை.

ஆனால், கொடுக்கிறோம் என்று புறப்பட்டு மிக சொற்ப மனித மனங்களை பாழ்படுத்திக் கொண்டிருக்கும் ஷேக்குகள் இவற்றையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ரகசிய ஞானம் என்று ஒன்று இஸ்லாத்தில் உண்டு என்றுக் கூறுவது, இறைவனுக்கும், அவன் வேதத்திற்கும், இறைத்தூதர்களுக்கும் எதிராக செய்யக் கூடிய பெரும் அநீதியாகும்.

மக்களுக்கு தெளிவான வழி காட்டுவதற்காகவும், அவர்கள் எளிதாக புரிந்துக் கொள்வதற்காகவும் இந்த குர்ஆன் இறக்கப்பட்டதாக தன் வேதத்தில் பல இடங்களில் இறைவன் சொல்லிக் காட்டுகிறான்.

பாதுகாக்கப்பட்ட நபிமொழிகளில் இறைத்தூதரின் வாழ்க்கை முறை திறந்த புத்தகமாக இருக்கிறது. இவை இரண்டிலும் இல்லாத - சொல்லப்படாத - ரகசிய ஞானத்தை இந்த ஷேக்குகள் எங்கிருந்து கற்றனர்?

ஞானம் பெறுவதற்காக பைஅத் கொடுக்கிறேன் என்பதெல்லாம் பெரும் மோசடியாகும். இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இருந்தால் அந்த நாட்டுக் குடி மக்கள் அந்த ஆட்சியாளரிடம் நான் உங்கள் ஆட்சிக்கு கட்டுப்பட்டு நடக்கிறேன் என்பதுதான் இஸ்லாம் சொல்லக்கூடிய இன்றைக்கும் நடை முறை படுத்த வேண்டிய ஒப்பந்தமாகும் அதாவது பைஅத் ஆகும். இதுவல்லாத ஆன்மீக பைஅத் முறை எதுவும் இஸ்லாத்தில் இல்லை.

மற்ற மார்க்கங்களில் போலி சாமியார்கள் இருப்பது போன்று இங்கும் ஷேக்குகள் என்ற பெயரில் பல போலிகள் அவ்வப்போது உருவாகும். தமது முரீது வியாபாரத்தை மக்களிடம் நல்ல விலைக்கு விற்க சமூகத்தில் தம்மை மேம்பட்டவர்களாக காட்ட நபி (ஸல்) அவர்கள் பெயரை பயன்படுத்தி தங்களுக்கு சாதகமாக பொய்யை ஹதீஸ் என்ற பெயரில் ரெடிமேடாக உருவாக்கி வைத்துக் கொண்டார்கள். அப்படி உருவாக்கப் பட்ட ஹதீஸ்களில் ஒன்று மகா பயங்கரமானதாகும்.

ஒரு கூட்டத்திற்கு ஷெய்க்காக இருப்பவர் ஒரு உம்மத்திற்கு அனுப்பப்பட்ட நபியை போன்றவராவார் என்று நபி (ஸல்)சொன்னதாக ஒரு செய்தி உள்ளது. இப்னு உமர் (ரலி) அறிவிக்க, இப்னு ஹிப்பான் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.



இந்த செய்தி மூலமாக ஷெய்க்குகள் தங்களை நபிக்கு ஒப்பாக ஆக்கிக் கொள்கிறார்கள். இதன் அர்த்தம் என்ன? இறைவன் எப்படி வஹி மூலமாக நபிமார்களோடு தொடர்பு வைத்திருக்கிறானோ அதே போன்று எங்களோடும் இறைவனுக்கு தொடர்பு உண்டு. நபிமார்கள் எப்படி இறைவனிடம் அந்தஸ்து மிக்கவர்களாக இருக்கிறார்களோ அதே போன்று நாங்களும் இறைவனிடம் அந்தஸ்து மிக்கவர்கள். சில நேரம் சில நபிமார்களுடன் இறைவன் பேசியது போன்று எங்களோடும் பேசுவான் என்றெல்லாம் மக்களை நம்பவைத்து மூளை சலவை செய்வதற்காகத்தான் இந்த செய்தியை உருவாக்கி இருக்கிறார்கள்.

தனி மனித வழிபாட்டுக்கு இஸ்லாத்தில் துளியும் அனுமதியில்லை என்பதை தனது தெளிவான வாழ்க்கையின் மூலமாக நிரூபித்து விட்டு போன நபி (ஸல்), இப்படி தனி மனித வழிபாட்டை ஊக்குவிக்க வழிவகுத்திருப்பார்களா..?

இந்த செய்தி நபியின் பெயரை பயன்படுத்தி புனையப்பட்டதாகும். இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இப்னு காஸிம் என்று ஒருவர் இடம் பெறுகிறார் இவர் பலவீனமானவர் அதனால் இந்த ஹதீஸை எடுத்துக் கொள்ள முடியாது என்று இதை பதிவு செய்த இப்னு ஹிப்பான் அவர்களே அடையாளம் காட்டி ஒதுக்கி விட்டார்கள்.

இது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தி என்று இப்னு ஹஜர் அஸ்கலானி குறிப்பிடுகிறார்கள். இதுபோன்ற இட்டுக்கட்டப்பட்ட செய்திகள்தான் முரீது போன்ற மார்க்கத்திற்கு முரணான காரியங்களுக்கு ஆதாரமாக்கப் படுகிறது.

இவர்களுக்கு மறைவான ஞானம் உள்ளது என்று கூறுவது அடுத்த திட்டமிட்ட பொய்யாகும். இதை பொய் என்று நிருபிக்க பெரிய ஆதாரமெல்லாம் தேவையில்லை. மறைவான ஞானம் உண்டு என்று சொல்லக்கூடிய இந்த ஷைக்குகளிடம் சென்று முன்னெச்சரிக்கை இல்லாமல் ஓங்கி ஒரு அறை அறையுங்கள். மறைவான ஞானம் இருந்தால் அதை தடுத்துக் கொள்ளட்டும் பாரக்கலாம்!

மறைவான ஞானத்திற்கு சொந்தக்காரன் இறைவன் ஒருவனே, அவன் அறிவித்துக் கொடுக்காத எது ஒன்றையும் எவரும் சொந்தமாக அறிந்துக் கொள்ள முடியாது என்பதற்கு நபிமார்கள் வாழ்வில் ஏராளமான அத்தாட்சிகள் உண்டு.

நான் மறைவானவற்றை அறிபவனாக இருந்தால் எந்த துன்பமும் என்னை தீண்டியிருக்காது. நான் நிறைய நன்மையை பெற்றுக் கொண்டிருப்பேன் என்று நபியே நீர் கூறும் என்கிறான் இறைவன். (அல் குர்ஆன்)

இந்த குர்ஆன் வசனத்திற்கு விரிவுரையே நடத்துகின்ற மாதிரி நபி ஸல் அவர்கள் வாழ்வில் நிறைய சம்பவங்கள் நடந்து விட்டன.

உஹது போர் களத்தில் அவர்களின் கன்னம் கிழிக்கப்பட்டு பல் உடைக்கப்பட்டு மூர்ச்சையாகி கீழே விழுகிறார்கள். வயதான காலத்தில் இந்த தாக்குதல் அவர்களுக்கு பெறும் துன்பமாக இருந்தது. நபியை தாக்கி இரத்தம் சிந்த வைத்தவர்கள் உருப்பட மாட்டார்கள் என்று சபிக்கும் அளவுக்கு மனநிலையில் பாதிப்பு ஏற்படுத்தியது அந்த தாக்குதல். நபி ஸல் அவர்களுக்கு மறைவான ஞானம் இருந்திருந்தால் தம்மை பாதுகாத்துக் கொண்டிருக்க முடியும்.

யூத பெண்ணொருத்தி ஆட்டிறைச்சியில் விஷம் கலந்து நபி (ஸல்) அவர்களை விருந்துக்கு அழைக்கிறாள். அவள் அழைப்பை ஏற்று அவளை கண்ணியப்படுத்த அவளிடம் சென்று விருந்துண்ட நபிக்கு விஷத்தின் தாக்கம் உடம்பில் ஏறி அவர்கள் மரணிக்கும் வரை தொந்தரவுக் கொடுத்தது. அதிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை.

தன் அருமை மனைவி ஆய்ஷா அவர்கள் மீது, அவர்களின் கற்பு மீது சில நயவஞ்சகர்கள் களங்கம் சுமத்தியபோது நபி (ஸல்) உண்மை நிலவரம் புரியாமல் துவண்டு போனார்கள். ஆய்ஷாவுக்கு தலாக் கொடுத்து விடுவோம் என்று அவர்கள் நினைக்கக் கூடிய அளவிற்கு, பிறரிடம் ஆலோசனை செய்யக் கூடிய அளவிற்கு நிலமை மோசமாகியது. அன்னை ஆய்ஷாவின் கற்புக்கு இறைவன் உத்திரவாதம் கொடுத்து வசனங்களை இறக்கும்வரை இதே நிலைதான் நீடித்தது. நபி (ஸல்) அவர்களுக்கு ரகசிய ஞானம் இல்லை என்பதை ஆயிரக்கனக்கான ஹதீஸ்களை எடுத்துக் காட்டி நிரூபித்துக் கொண்டே செல்லலாம் பதில் மிக நீளமாகிவிடும் என்பதற்காக சுருக்குகிறோம்.

மறைவானவற்றின் திறவுகோல் அவனிடமே இருக்கிறது அவற்றை அவனைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 6:59)

அல்லாஹ்வைத் தவிர வானங்கள் பூமியிலுள்ள எவரும் மறைவானவற்றை அறிய மாட்டார்கள். (அல் குர்அ10ன் 27:65)

இறை வேதத்தின் போதனைகளை உண்மை என்று நம்பக் கூடிய எந்த முஸ்லிமும் இந்த வசனங்களை விசுவாசித்து இதற்கு மாற்றமாக பொய் கூறி திரியும் போலி ஷைக்குகளை புறக்கணித்து மக்களுக்கு இனங்காட்டுவார்கள். இனங்காட்ட வேண்டும்.

ஆன்மீக பைஅத்திற்கு குர்ஆனிலிருந்து எடுத்துக் காட்டப்படும் வசனம். அதன் விளக்கத்தையும் தெரிந்துக் கொள்வோம்.

60:12. நபியே! முஃமினான பெண்கள் உங்களிடம் வந்து, அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணைவைப்பதில்லை என்றும், திருடுவதில்லை என்றும், விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் பிள்ளைகளை கொல்வதில்லை என்றும், தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ, அத்தகைய அவதூறை இட்டுக்கட்டிக் கொண்டு வருவதில்லை என்றும், மேலும் நன்மையான (காரியத்)தில் உமக்கு மாறு செய்வதில்லையென்றும், அவர்கள் உம்மிடம் பைஅத்து - வாக்குறுதி செய்தால் அவர்களுடைய வாக்குறுதியை ஏற்றுக் கொள்வீராக, மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுவீராக, நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.

ஆன்மீகத் தலைவராக இருந்த நபி(ஸல்) அவர்களிடம் பெண்கள் பைஅத் செய்ய வேண்டும் என்று இந்த வசனம் குறிப்பிடுவதால் இன்றைக்கும் ஆன்மீக பைஅத் உண்டு என்பது சிலரது வாதம்

இந்த சந்தேகத்தில் இருக்கும் சகோதரர்களுக்கு புரியும் விதத்தில் இதை தெளிவாக விளக்குவோம்.

நீங்கள் ஒரு வியாபார தளத்தின் நிர்வாகியாக இருக்கிறீர்கள் அந்த அதிகாரத்தில் எங்களுக்கு நீங்கள் வேலை கொடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்போது எங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையில் நாங்கள் எந்த தவறும் செய்யாமல் நிர்வாகத்திற்கு மாறு செய்யாமல் கட்டுப்பட்டு நடப்போம் என்று நாங்கள் உங்களிடம் பைஅத் (உறுதி மொழி) செய்யலாம். நீங்கள் எங்களிடமிருந்து பைஅத் பெறலாம். இதில் அர்த்தம் இருக்கிறது என்று உங்களுக்குப் புரியும்.

இன்னொரு பைஅத் பற்றி கூறுகிறோம் அர்த்தம் புரிகிறதா என்று பாருங்கள். நீங்கள் வெளிநாட்டில் பணி புரிகிறீர்கள். நாங்கள் அரபகத்தின் பல பகுதிகளில் பணி புரிகிறோம். இப்போது நாங்கள் அனைவரும் சேர்ந்துக் கொண்டு 'இன்னாரே... நாங்கள் அரபகத்தில் நேர்மையாக நடப்போம் இதற்காக உங்களிடம் பைஅத் செய்யப் போகிறோம்' என்று கூறினால் 'ஆம் என்னிடம் பைஅத் செய்வது சரிதான்' என்று நீங்கள் கூறுவீர்களா... அல்லது 'உங்களிடம் பைஅத் வாங்குவதற்கு நான் யார்? இது கிறுக்குத் தனமாக இருக்கிறது' என்று புறக்கணிப்பீர்களா...

அல்லது இப்படி சிந்தித்துப் பாருங்கள் 'இதுதான் இஸ்லாம்.காம் குழுவினர்களே... நீங்கள் அனைவரும் இந்தப் பணியில் ஒழுங்காக செயல்பட வேண்டும் என்று என்னிடம் பைஅத் செய்யுங்கள்' என்று நீங்கள் கூறுவதாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த அறிவிப்பின் பொருள் வெறும் உளறலாகத்தானே இருக்க முடியும்.

பைஅத் செய்ய வேண்டுமென்றால் பைஅத் செய்பவருக்கும் அல்லது பைஅத் கேட்பவருக்கும் நமக்கும் மத்தியில் உள்ள தொடர்பு என்ன என்பதை நாம் முதலில் விளங்க வேண்டும். ஆன்மீகவாதிகளிடம் பைஅத் செய்வது அறிவுக்கு பொருத்தமானதா என்பதற்கு இப்போது வருவோம்

ஆன்மீகத்தை போதிப்பதாக சொல்லும் உண்மையான ஷேக்குகளிடம் போய் பைஅத் செய்கிறார்கள். எப்படி? நான் தவறாமல் ஐந்து வேலையும் தொழுவேன், நோன்பு வைப்பேன், ஜகாத் கொடுப்பேன் என்று. இப்போது சிந்தித்துப் பாருங்கள் இந்த வணக்கங்களுக்கும் ஷேக்குகளுக்கும் உள்ள தொடர்பு என்ன? தொழுகை அவருக்குரியதா.. நோன்பு அவருக்குரியதா.. அல்லது ஜகாத்து தான் அவருக்குரியதா... இதில் எதுவுமே அவருக்குரியதல்ல எனும் போது இவற்றை சரியாக செய்வேன் என்று அவரிடம் போய் எப்படி உறுதி மொழி எடுக்க முடியும்?

இன்னும் சொல்லப் போனால் இந்த வணக்கங்கள் அவர் மீதும் கடமையாகிறது. இந்த வணக்கங்களுக்காக ஷேக்குகளிடம் - முரீதுகளிடம் - பைஅத் செய்ய வேண்டுமென்றால் இதே கடமைகளை செய்ய வேண்டிய அவர்கள் யாரிடம் பைஅத் செய்வார்கள்? அவர்கள் பைஅத் செய்வதற்கு இன்னொரு ஷேக் வேண்டுமே... அவரைவிட பெரிய ஆன்மீகவாதி இருந்தால் அந்த ஆன்மீகவாதி மீதும் இந்த வணக்கங்கள் கடமையாக நிற்கும் அப்போது அவர் பைஅத் செய்வதற்கு இன்னொரு ஆன்மீகவாதி வேண்டும். இப்படியே ஆயிரம் ஆன்மீகவாதிகள் கிடைத்தாலும் கடைசியில் உள்ளவர் பைஅத் செய்வதற்கு ஆளில்லாமல் போய்விடும். அதாவது பைஅத் முற்றுப்பெறாமல் விபரம் புரியாமல் தடைப்பட்டு நின்றுவிடும். எனவே ஆன்மீகவாதிகளிடம் செய்யக் கூடிய பைஅத் என்பது தற்போது இஸ்லாத்தில் இல்லை. வணக்கங்கள் அனைத்தும் இறைவனுக்குரியது என்பதால் அவனிடம் நாம் பைஅத்(ஒப்பந்தம்) செய்துக் கொள்ளலாம்.

இப்போது நாம் சுட்டிக் காட்டிய வசனத்திற்கு வருவோம். அதில் ஆன்மீகவாதியிடம் செய்ய சொன்ன பைஅத்தும் இருக்கிறது. ஆட்சியாளரிடம் செய்ய வேண்டிய பைஅத்தும் இருக்கிறது.

முஃமினான பெண்கள் உம்மிடம் வந்து அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைப்பதில்லை என்று கூறினால்... என்று துவங்குகிறது வசனம்.

இணைவைத்தல் பெரும் கெடுதியான காரியம் என்பது இறைவனின் அதிகாரத்திற்குட்பட்ட விஷயம் எனவே அவனிடம் தான் இது பற்றி பைஅத் செய்ய வேண்டும். ஆனால் இந்த ஆன்மீக பைஅத்தை மக்கள் ஏன் நபி(ஸல்) அவர்களிடம் செய்தார்கள்? இன்னும் சொல்லப் போனால் இணைவைக்கக் கூடாது என்பது நபிக்கும் பொருந்தக் கூடிய அவரும் கட்டுப்படக் கூடிய, அவர்களும் இறைவனிடம் பைஅத் செய்ய வேண்டிய ஒரு விஷயம். நிலமை இப்படி இருக்க நபி(ஸல்) பைஅத் பெற்றதன் காரணமென்ன?

பதில் மிகவும் இலகுவானது. நபி(ஸல்) அவர்கள் இறைவனால் நியமிக்கப்பட்ட தூதராக இருந்தார்கள். தூதர்களிடம் செய்யப்படும் ஒப்பந்தம் அதிகாரத்திடம் செய்யப்படும் ஒப்பந்தமாகவே கருதப்படும்.

இந்தியா, தொழில் துறையை வளப்படுத்த ஜப்பானுடன் ஒப்பந்தம் செய்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஜப்பானில் நடக்கும் இந்த ஒப்பந்தத்திற்கு இந்திய பிரதமர் போய்தான் கையொப்பம் இடவேண்டும் என்கிற அவசியமில்லை. அந்தத் துறைக்காக அரசால் நியமிக்கப்பட்ட தூதர் கையோப்பமிட்டால் போதும். அவர் நியமிக்கப்பட்ட தூதராக இருப்பதால் அந்த கையோப்பம் இந்தியாவின் கையோப்பமாகவே உலகம் அங்கீகரித்துவிடும்.

நபி(ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக இருந்ததால் அவன் அனுமதிப்படி அவன் சார்பாக பைஅத்தை - ஒப்பந்தத்தை ஒப்புக் கொள்கிறார்கள். அவர்களுக்கு அந்த அதிகாரத்தை இறைவன் கொடுத்திருந்தான். அவர்களுக்கு பிறகு இறைத்தூதர்கள் மட்டுமே வகிக்க வேண்டிய அந்த ஆன்மீக தலைமை என்பது வேறு எவராலும் பூர்த்தி செய்யப்படாமல் - பூர்த்தி செய்ய முடியாமல் காலியாக இருக்கிறது. மறுமைநாள் வரை அப்படியே தான் இருக்கும்.

எனவே ஆன்மீகவாதியாக இருந்து அவர்கள் பெற்ற பைஅத்தை அவர்களுக்கு பிறகு யாரும் பெற முடியாது, பெறக்கூடிய அதிகாரமும் யாருக்கும் இல்லை. அதனால்தான் நபி(ஸல்) அவர்களுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த நன்மக்களான அவர்கள் யாரும் இறைவனுக்கு செய்யும் வணக்கங்கள் சம்பந்தமாக மக்களிடம் பைஅத் பெறவில்லை. அதே சமயம் ஆட்சிக்குரிய காரியங்களுக்கு பைஅத் பெற்றுள்ளார்கள்.

அதே வசனத்தில் தொடர்சியாக வரும் 'திருட்டு' 'கொலை' 'விபச்சாரம்' 'அவதூறு' போன்ற பாவங்களில் ஈடுபடமாட்டோம் என்ற உறுதிமொழியை - பைஅத்தை இன்றும் செய்யலாம். ஆனால் பெறுபவர்கள் ஆட்சியாளராக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் தான் இந்த குற்றங்களுக்கு தண்டனை கொடுக்கும் அதிகாரம் பெற்றவர்கள்.

இன்று ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் பைஅத்கள் பல மோசடித் தனத்திற்கும், மார்க்கத்திற்கு எதிரான பல பாவமான காரியங்களுக்கும் வழிவகுத்துக் கொண்டிருப்பதால் ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் பைஅத்களை நாம் கட்டாயம் எதிர்த்து மக்களுக்கு இனங்காட்ட வேண்டும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...