(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, February 28, 2015

அழகுக்கு ஆசைப்பட்டு , உயிருக்கு போராடும் கொடுமை ... தாய்மார்களே உங்களுக்குத்தான்.

சென்னை தனியார் ஆஸ்பத்திரியின் தவறான ஆபரேஷனால் உயிருக்கு போராடும் இளம்பெண்
அவள் மீண்டு வருவாளா...? என்ற பரிதவிப்பில் கணவர்!
அம்மா, இனி உன்னால் நடக்க முடியாதா... சாப்பாடு ஊட்ட மாட்டியா...? என்று அழும் குழந்தைகள்!

சக்கர நாற்காலியில் அமர்ந்து டியூப் வழியே செலுத்தப்படும் உணவை உட்கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் அமுதா.
குதிரை போல் துள்ளி குதித்து நடமாடிய அமுதா திடீரென்று நடைபிணம் போல் ஆகிவிட்டதை நினைத்து மொத்த குடும்பமும் கண்ணீரில் மிதக்கிறது.
கோடம்பாக்கம் கக்கன் காலனியைச் சேர்ந்தவர் அமுதா (35). இவர் விக்னேஸ்வரன் (14), விஜய நாராயணன் (10) என்ற இரண்டு குழந்தைகளின் தாய்.
மண்ணினால் செய்யப்படும் விதவிதமான வீட்டு அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். திடீரென்று அமுதா இந்த நிலைக்கு ஆளானது ஒரு தவறான ஆபரேசனால்.
நடந்த சம்பவத்தை கண்ணீர் மல்க விவரித்தார் அமுதாவின் கணவர் கவுரி சங்கர்.
நான் கொல்கத்தா, உ.பி., ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு சென்று மண் சிற்பங்களை வாங்கி வருவேன். இந்த சிற்பங்களுக்கு நல்ல மவுசு இருக்கிறது. கடை வியாபாரத்தை அமுதா கவனித்து கொண்டார்.

விலை உயர்ந்த மண் சிற்ப அலங்கார பொருட்களை வாங்குவதற்காக எங்கள் கடைக்கு ஏராளமான திரை நட்சத்திரங்களும் வருவார்கள். அப்போது பிரபல நடிகை ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது ‘ஒபிசிடி’ (வயது பருமன்) ஆபரேசன் செய்து கொண்டால் உடல் ஸ்லிம் ஆகி அழகு கூடும் என்று கேள்விப்பட்டிருக்கிறார்.
அன்று முதல் ஒபிசிடி ஆபரேசன் செய்து கொள்ள அமுதாவுக்கும் ஆசை வந்தது. அந்த ஆபரேசன் செய்யும் அளவுக்கு என் மனைவி உடல் பருமன் இல்லை. எனவே நான் வேண்டாம் என்று தடுத்தேன். ஆனால் அவள் கேட்கவில்லை.
ஜி.என்.செட்டி ரோட்டில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர்களும் ஒபிசிடி ஆபரேசன் சாதாரணமானதுதான். இதை செய்து கொண்டால் உடல் மெலிந்து ஐஸ்வர்யாராய் மாதிரி ஆகிவிடலாம். வாழ் நாள் முழுக்க சர்க்கரை வியாதியும் வராது என்று ஆசை காட்டி இருக்கிறார்கள்.
டாக்டர்களின் ஆலோசனையில் மிகுந்த நம்பிக்கை கொண்ட அமுதா தனியாகவே சென்று அட்மிட் ஆகிவிட்டார். பிறகு என்னை கட்டாயப்படுத்தி ஆபரேசனுக்கு சம்மதம் கேட்டார்.
பின்விளைவுகள் ஏதாவது வந்துவிடும். வேண்டாம் என்று நான் பலமுறை எடுத்து கூறியும் அவள் கேட்க வழியில்லை. வேறு வழியில்லாமல் ஆபரேசனுக்கு சம்மதித்தேன்.
ரூ.3 லட்சம் செலவு செய்து ஆபரேசன் செய்தோம். வீடு திரும்பிய பத்து பதினைந்து நாளில் மீண்டும் வயிறு வலி ஏற்பட்டதால் அதே ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றோம்.
ஆபரேசன் செய்த இடத்தில் ஓட்டைகள் சரியாகவில்லை. அதன் வழியே சீழ் கொட்டுகிறது. அதை அகற்றினால் சரியாகிவிடும் என்று 2–வது முறையாக ஆபரேசன் செய்து சீழை எடுத்தனர்.
இனி பிரச்சினை இருக்காது என்ற நம்பிக்கையில் வீடு திரும்பினோம். அதன் பிறகு மீண்டும் வயிறு வலி ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டது. மீண்டும் ஆஸ்பத்திரிக்கு சென்றோம். வயிற்றில் வேறு கோளாறு இருக்கிறது. ‘ஓபன் சர்ஜரி’ செய்துதான் ஆக வேண்டும் என்றனர். அதையும் செய்தனர்.
அதன் பிறகுதான் நிலைமை மிகவும் மோசம் ஆனது. மூச்சுவிட முடியவில்லை. உடல் வீங்கியது. மீண்டும் அதே ஆஸ்பத்திரிக்கு சென்றபோது எங்களால் முடியாது. வேறு பெரிய ஆஸ்பத்திரிக்கு செல்லுங்கள் என்று கையை விரித்துவிட்டனர்.
உடனே அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். அங்கு டாக்டர்கள் ‘ஸ்கேன்’ செய்து பார்த்தபோது மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. வயிற்றுக்குள் ‘ஸ்பாஞ்ச் பேட்’ ஒன்றை வைத்து தைத்து விட்டிருக்கிறார்கள்.
உடனே ஆபரேசன் செய்தாக வேண்டும் என்று டாக்டர்கள் ஆபரேசன் செய்து அதை அகற்றினார்கள். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்ததால் உயிரை காப்பாற்றினார்கள்.
ரூ.20 லட்சத்துக்கு மேல் செலவு செய்து உயிரை காப்பாற்றி வைத்திருக்கிறோம். இப்போதைக்கு எழுந்து நடமாட முடியாது. இன்னும் 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை வாய் வழியே உணவு சாப்பிட முடியாது. வயிற்றில் துவாரம் போட்டு டியூப் போட்டு இருக்கிறார்கள். அதன் வழியே திரவ உணவை செலுத்தி வருகிறோம்.
நான் தவறான முடிவெடுத்து விட்டேன் என்று இப்போது என் மனைவி கண்ணீர் வடிக்கிறாள். மீண்டும் அவள் பழைய நிலைக்கு வர வேண்டும் என்று நாங்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம் என்ற அவரின் வேதனை குரலோடு ஆவேசமும் தெரிந்தது.
ஆஸ்பத்திரி செய்த தவறுக்காக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அகில இந்திய மருத்துவ கவுன்சில், தமிழக மருத்துவ கவுன்சில் ஆகியவற்றுக்கும் புகார் மனுக்களை அனுப்பி உள்ளார்.
எனக்கு என் மனைவி உயிர் காப்பாற்றப்பட வேண்டும். வேறு எந்த பெண்ணுக்கும் இது போன்ற நிலைமை ஏற்பட கூடாது என்றார்.
பணத்தின் மீது மட்டும் குறியாக இருக்கும் சில டாக்டர்கள் மக்களின் உயிர் மீது இவ்வளவு கொடூரமான கரிசனம் கட்டியிருப்பது  இருப்பது ஜீரணிக்க முடியாதது.

-Maalaimalar and pasam social services. .

இது தொடர்கதையாக நடந்து வருகிறது ...  தாய்மார்கள் தான் இதற்க்கு பலிகடா ஆகிறார்கள் .. கணவன்மார்கள் என்ன தான் சொன்னாலும் கேட்பதில்லை ..
இதைபார்த்தாவது விளங்கிகொள்ளட்டும் ..

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...